செங்கல்பட்டு, ஜூலை 28: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திகா (22). இவர், சிங்கப்பெருமாள்கோவில் அருகே வீடு வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி, மறைமலைநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சர்வீஸுக்கு கொடுத்திருந்த தனது செல்போனை வாங்குவதற்காக நேற்றுமுன்தினம் இரவு கீர்த்திகா தன்னுடன் பணிபுரியும் தோழிகளுடன் சென்று செல்போனை வாங்கிக்கொண்டு மீண்டும் திரும்பி வந்தார். அப்போது சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையம் அருகே கவனக்குறைவாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அந்த நேரத்தில், சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி அதிவேகமாக வந்த விரைவு ரயில் எதிர்பாராதவிதமாக கீர்த்திகா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் இவரது தோழிகள், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்து தகவலறிந்த தாம்பரம் ரயில்வே இருப்புப்பாதை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் வாங்கச் சென்ற இடத்தில் தண்டவாளத்தைக் கடந்தபோது விரைவு ரயில் மோதி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே போலீசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், அவசரத்தில் தண்டவாளத்தைக் கடப்பது என்பது வெறும் விதிமீறல் அல்ல, அது உங்களை நம்பி வாழும் குடும்பத்தின் நிம்மதியை அழிக்கும் பேராபத்து. மேலும் பாதசாரிகளுக்கான மேம்பாலம் அல்லது, சுரங்கப்பாதைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். சில நிமிட அவசரம் உங்கள் ஆயுளையே முடித்துவிடுகிறது என அறிவுரை வழங்கினர்.
