கூடுவாஞ்சேரி, ஜூலை 29: ஊரப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் புதிதாக பள்ளி கட்டிடம் மற்றும் சமையல் கூடம் ஆகியவை கட்டப்பட்டு வருகிறது.
இதேபோல் ஜெகதீஷ் நகரில் மழைநீர் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் நேற்று மாலை திடீரென சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளியில் தரமான உணவு, குடிநீர், சுகாதாரமும் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறதா என்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் கேட்டறிந்தார். அப்போது அரசு அதிகாரிகள், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
