மாமல்லபுரம் நகராட்சி கூட்டம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்: கவுன்சிலர்கள் கோரிக்கை

மாமல்லபுரம், ஆக.1: மாமல்லபுரம் நகராட்சி கூட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். மாமல்லபுரம் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில், ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நகராட்சி அலுவலக மாடியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் அபர்ணா தலைமை தாங்கினார்.

நகராட்சி தலைவர் வளர்மதி, துணை தலைவர் ராகவன், தூய்மை ஆய்வாளர் குருசாமி, மேலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அதிகரிக்க வேண்டும், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன் வைத்தனர். இவை அனைத்தையும், பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் அபர்ணா தெரிவித்தார்.

 

Related Stories: