×

வனக் காப்பாளர், வனக் காவலர் பதவி ஆக. 3ம்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 (குரூப் 4) பணிகளில் அடங்கிய வனக் காப்பாளர் மற்றும் வனக் காவலர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பத்தாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு வருகிற 3ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவகலகத்தில் நடைபெற உள்ளது.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ள தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Forest Guard ,TNPSC ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,Bhanot Mrukender Lal ,
× RELATED முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர்...