பழநி, ஜூலை 24: மழை இல்லாத நிலையில் பயிர் காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக தொப்பம்பட்டி தோட்டக்கலை அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: 2026-27ம் ஆண்டிற்கான பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் மற்றும் மழைப்பொழிவு குறைபாடு காரணமாக குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தொப்பம்பட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெங்காயம், தக்காளி, கத்தரி உள்ளிட்ட பயிர்களுக்கு கட்டாயம் காப்பீடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாழை, மர வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், வெண்டை, மஞ்சள், பூண்டு, இஞ்சி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தின் மூலம் விதைப்பு செய்ய முடியாத நிலை, விதைப்பு தோல்வி, பயிர் வளர்ச்சிக் காலத்தில் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதம், மகசூல் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பிந்தைய பாதிப்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும்.
