×

கட்சி தாவிய பெண் எம்பிக்களை தரக்குறைவாக பேசியதால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பென்ட்

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதீப் பந்தோபாத்யாய், மிதாலி பாக், ககோலி கோஷ் தஸ்திதார் மற்றும் சதாப்தி ராய் உள்பட 20 பேர் சிறிய கட்சியான தேசியவாத குடிமக்கள் கட்சியில்(என்பிஐ) இணைந்துள்ளனர். இந்த சூழலில் மக்களவை நேற்று காலை கூடியதும், நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டு, அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அப்போது மக்களவை வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜிக்கும், என்சிபிஐ கட்சியில் சேர்ந்த பெண் உறுப்பினர்களான மிதாலி பாக், ககோலி கோஷ் தஸ்திதார் மற்றும் சதாப்தி ராய் ஆகியோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது, கல்யாண் பானர்ஜி தங்களை திருடன் என்று சொன்னதாகவும், தங்களுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் மிதாலி பாக், ககோலி கோஷ் தஸ்திதார் மற்றும் சதாப்தி ராய் ஆகியோர் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அவரது அறையில் சந்தித்து முறைப்படி புகார் அளித்தனர்.  இதைத்தொடர்ந்து கல்யாண் பானர்ஜியை மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Trinamool Congress ,Kalyan Banerjee ,New Delhi ,West Bengal ,Sudeep Bandopadhyay ,Mithali Bagh ,Kakoli Ghosh Dastidar ,Shatabdi Roy ,Nationalist Citizens Party ,NPP ,
× RELATED முதல்வர் அலுவலக அறிக்கைகள் மாயம்...