உதயநிதி ஸ்டாலின் கண்டனம்: நீட் தேர்வு மிகப்பெரிய மோசடியாக மாறியுள்ளது என்றும் விமர்சனம்

சென்னை: பாடகர் தெருக்குரல் அறிவு கைது செய்யப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மிகப்பெரிய மோசடியாக மாறியுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவை கைது செய்த தமிழக அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அவரது குரல் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான பேரணிகளும் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் வேளையில், அறிவுவை கைது செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக தாங்களும் களமிறங்க திட்டமிட்டுள்ள தமிழக இளைஞர்களுக்கு, இது ஒரு கவலையளிக்கும் செய்தியை அளிக்கிறது. நீட் தேர்வு முரண்பாடுகள் நிறைந்தது மட்டுமல்ல; அது ஒரு மிகப்பெரிய மோசடியாகவும் மாறியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் ஒடுக்கப்படக் கூடாது; மாறாக, அவை செவிமடுக்கப்பட வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: