சென்னை: உணவுப்பொருள் வழங்கல் துறை சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன், தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். ஒன்றிய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் சந்தித்து, தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையின்போது, ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள பல்வேறு முன்மொழிவுகள், தமிழ்நாட்டின் பொது விநியோக அமைப்பை மேலும் வலுப்படுத்துதல், நெல் மற்றும் உணவுப் பொருட்கள் கொள்முதல், சேமிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேம்படுத்துதல், நடப்பாண்டிற்கான திட்டங்கள், மாநிலத்திற்கு தேவையான உணவுப் பொருட்களின் ஒதுக்கீடு தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நெல் கொள்முதல் செய்தமைக்காக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தேவைப்படும் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
இந்த சந்திப்பில், ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் அமுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
