ஈரோடு, மார்ச் 14: ஈரோடு திண்டல் காரப்பாறையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று பொதுமக்களிடம் திமுக வேட்பாளர் முத்துசாமி உறுதியளித்தார். ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் முத்துசாமி நேற்று திண்டல் காரப்பாறை பகுதியில் வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேரித்தார். அப்போது வேட்பாளர் முத்துசாமிக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த மக்களிடம் வேட்பாளர் முத்துசாமி பேசியதாவது: திண்டல் காரப்பாறை பகுதியானது மாநகராட்சி எல்லைக்குள் இருந்தபோதிலும் அடிப்படை வசதிகள் என்பது மிகவும் குறைவாக உள்ளது. சாலை, சாக்கடை, குடிநீர், தெருவிளக்குகள், தனிநபர் இல்லக்கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இதே போல போக்குவரத்து வசதி என்பதும் மிகவும் குறைவாக உள்ளது.