நாகர்கோவில், ஜூன் 21: குமரி மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2009 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்த நலத்திட்ட உதவிகள் பெற முஸ்லீம் இனத்தைச் சார்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள், பள்ளி வாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் /ஆசிரியைகள். முஅத்தின்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷூர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.
மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே www.uwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்கள் அறிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
