திருச்சி, மார்ச்.13: சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் நேற்று வந்தனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. தேர்தல் பணிகள் சுமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, தேர்தல் ஆணையம் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொது பார்வையாளர்களாக வெளி மாநிலங்களை சார்ந்த மூத்த இந்திய ஆட்சிப்பணியாளர்களையும், செலவின பார்வையாளர்களாக இந்திய வருவாய் பணி அலுவலர்களையும் நியமனம் செய்துள்ளது.பொதுப்பார்வையாளர்களான மணப்பாறை, ரங்கம் தொகுதிகளுக்கான ராம் பிரதாப் சிங் ஜேடன் மணப்பாறை டிஎன்பிஎல் விருந்தினர் மாளிகையிலும், திருச்சி மேற்கு பார்வையாளர் கிரிஷ், திருச்சி கிழக்கு ராஜ்புத் ஆகியோர் மன்னார்புரம் சுற்றுலா மாளிகையில், திருவெறும்பூர் தொகுதி முகமத் தயாப் திருவெறும்பூர் பெல் விருந்தினர் மாளிகை, லால்குடி, மண்ணச்சநல்லூர் பார்வையாளர் கிருஷ்ணகுமார் மன்னார்புரம் சுற்றுலா மாளிகை, முசிறி, துறையூர் (தனி) சுரேந்திர ராம் துறையூர் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் தங்கி உள்ளனர்.