கலசபாக்கம், ஜூலை 9: துரிஞ்சாபுரம் அருகே விஏஓ அலுவலக சிமெண்ட் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் பொற்குணம் கிராமத்தில் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விஏஓ அலுவலகம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று உள்ளது. தற்போது இதில் விஏஓ ரமேஷ், உதவியாளர்கள் 2 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மாலை அலுவலகத்தை பூட்டி சென்றனர். நேற்று காலை விஏஓ ரமேஷ் அலுவலகத்தை திறந்தபோது அலுவலக அறையின் சிமெண்ட் மேற்பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் அறையில் இருந்த கோப்புகள் சிதறி கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உதவியாளர்கள் கீழே சிதறி இருந்த கற்களை அகற்றினர்.
