பவானிசாகர் அணையில் இருந்து 3ம் சுற்று பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

சத்தியமங்கலம், மார்ச் 12: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் போதிய நீர் உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை குறிப்பிட்ட இடைவெளி விட்டு 5 சுற்றுகளாக கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள இரட்டைப்படை மதகுகள் பகுதியில் ஒரு லட்சத்து 3500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நிலக்கடலை, எள், சோளம் உள்ளிட்ட புன்செய் பயிர்கள் பயிரிட தண்ணீர் திறக்கப்பட்டது. ஜனவரி 7  முதல் தற்போது வரை குறிப்பிட்ட இடைவெளி விட்டு 3 சுற்றுகளாக தண்ணீர் திறக்கப்பட்டு மூன்றாம் சுற்று தண்ணீர் நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டது. மீண்டும் 10 நாட்கள் கழித்து நான்காம் சுற்று தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.32 அடியாகவும், நீர் இருப்பு 23.8 டி.எம்.சி. ஆகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3444 கன அடியாகவ உள்ள நிலையில் அணையிலிருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக பவானி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: