பேராவூரணி, மார்ச் 12: பேராவூரணி ரயில் நிலையம் பராமரிப்பு இன்றி புதர் மண்டிக்கிடக்கிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நூறு ஆண்டுகள் பழமையான பேராவூரணி ரயில் நிலையம் கடந்த 2012ம் ஆண்டு காரைக்குடி - திருவாரூர் இடையேயான அகல ரயில் பாதை பணிகளுக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்றது.மூன்று ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் என கூறப்பட்டு ஒன்பது ஆண்டுகளை கடந்தும் பணிகள் முடிந்தபாடில்லை. பேராவூரணி ரயில் நிலையத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டி நடைமேடைகள் அமைக்கப்பட்டு, திறப்பு விழா காண்பதற்குள் பராமரிப்பில்லாததால் பாழாகி வருகிறது.ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட நடைபாதைகள் தரமாக கட்டப்படாததால் விரிசல் ஏற்பட்டு உள்ளது. 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலால் சேதமடைந்த ரயில் நிலையத்தில் உள்ள மின் விசிறிகள் பழுதைடைந்த நிலையில் உள்ளது.