திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகரம் பண்டிகை, வார இறுதி நாட்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 81 ஆயிரத்து 340 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
44 ஆயிரத்து 874 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.76 கோடி காணிக்கை செலுத்தினர். 4.42 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 3.31 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று வைகுண்டம் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பிய நிலையில், 4 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆக்டோபஸ் கட்டிடம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.
