பனாஜி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரோந்து கப்பலான ஐசிஜிஎஸ் அக்ஷய் இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டது. கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால், ஒன்றிய அரசின் தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களின் கீழ் ஐசிஜிஎஸ் அக்ஷய் அதிவேக ரோந்து கப்பல் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டது. இந்த கப்பலை, இந்திய கடலோர காவல் படை நேற்று முறைப்படி தனது சேவையில் இணைத்தது.
வாஸ்கோவில் உள்ள கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில் நடந்த இதற்கான விழாவில் கடலோர காவல் படையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கப்பல் கடலோர பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆபத்தில் உள்ள மாலுமிகளுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும். இதன் கட்டளை அதிகாரியாக கமாண்டன்ட் தீபக் சவுபே செயல்படுவார்.
