உடற்தகுதி சான்றுக்கு ரூ.900 லஞ்சம் கேட்ட அரசு பெண் டாக்டர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அக்கிரெட்டிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி ரவீனா(32). இவர்களுக்கு தீட்சிதா என்ற மகளும், பிரதீஷ்வர், லியாஸ்பகத்சிங் என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். தீட்சிதா 5ம் வகுப்பும், பிரதீஷ்வர் 4ம் வகுப்பும், லியாஸ்பகத்சிங் முதல் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசிகள் மற்றும் உடற்தகுதி குறித்த மருத்துவச்சான்று வழங்குமாறு பள்ளியில் கேட்டுள்ளனர்.

எனவே இந்த சான்றுகள் பெற கடந்த 22ம்தேதி காலை 11 மணியளவில் ரங்கனின் மனைவி ரவீனா, காட்பாடி பள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த பெண் டாக்டர் வெங்கடலட்சுமியை அணுகினார். அதற்கு டாக்டர் வெங்கடலட்சுமி, ரவீனாவிடம், ‘ஒவ்வொரு பிள்ளைக்கும் மருத்துவச்சான்றுக்கு தனித்தனியாக ரூ.300 வீதம் மொத்தம் ரூ.900 கொடுத்தால்தான் சான்றிதழ்கள் தர முடியும். பணத்தை ரொக்கமாகவோ அல்லது ‘ஜி பே’ மூலமாகவும் கொடுக்க வேண்டும்.

இல்லை என்றால் வேறு எங்காவது சென்று வாங்கிக்கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கன் மனைவி ரவீனா தனது பிள்ளைகளுக்கான உடற்தகுதி சான்று பெற பணம் தரவிருப்பமில்லாத நிலையில், இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

மேலும் இதற்கு ஆதாரமாக பெண் டாக்டர் வெங்கடலட்சுமி லஞ்சம் கேட்ட ஆடியோவையும் செல்போனில் ரெக்கார்டு செய்து, சிடியாக லஞ்ச ஒழிப்பு போலீசில் கொடுத்துள்ளார். ஆடியோ ஆதாரத்துடன் புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி, டாக்டர் வெங்கடலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று முன்தினம் கைது செய்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

* வண்டல் மண் அள்ள மாமூல் பெண் இன்ஸ்பெக்டர் 2 போலீசார் மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள கோமுகி அணை பகுதியில் வண்டல் மண், மலையடிவார ஆறுகளில் மணல் அதிகம் காணப்படுகிறது. இதை சில சமூக விரோதிகள் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக பொக்லைன் இயந்திரம் கொண்டு அள்ளிச் செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது.

வண்டல் மண் கடத்தல் குறித்து தகவல் அறிந்த கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் கலையரசி வடக்கநந்தல் பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர்களிடம் தனது கார் டிரைவர்கள் மூலம் திருட்டுத்தனமாக மண் அள்ள பணம் கேட்டதாக சொல்லப்படுகிறது. காவல் ஆய்வாளர் கலையரசியின் டிரைவர்கள் பணம் கேட்டதை டிராக்டர் டிரைவர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ரெக்கார்டு செய்து மாவட்ட எஸ்பி ஷானாசிடம் புகார் செய்துள்ளனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் அவரது டிரைவர்கள் வேல்முருகன், செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: