பெங்களூரு: கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி பெங்களூரு விதானசவுதாவில் அளித்த பேட்டி:
காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் தற்போதைய சூழலில் அணை கட்டுவது அவசியமாகவுள்ளது. இது தண்ணீர் சேமிப்பதற்கும், பெங்களூரு மாநகரில் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
கூட்டாட்சி அமைப்பில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உள்ளது.
இருப்பினும், மேகதாது திட்டம் தொடர்பாகத் தமிழ்நாடு எதிர்வினையாற்றியிருப்பது வருத்தமளிக்கிறது. மாநிலங்கள் இடையிலான நட்புறவு வளர்த்து கொள்வது அவசியம். மேகதாது விவகாரம் தொடர்பாக இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குத் தமிழ்நாடு முன்வந்தால், தமிழ்நாடு அரசுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகம் தயாராகவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
