கோலாப்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் உள்ள சஞ்சய் டினா பாட்டீல், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், பாவ்சாகேப் வக் சவுரே, நாகேஷ் பாட்டீல்-அஷ்டிகர் மற்றும் ஓம் பிரகாஷ் ராஜே நிம்பல்கர் ஆகிய 6 எம்பிக்களும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைய உள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன. இந்த சதிக்கு பாஜதான் காரணம் என உத்தவ் சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமித் ஷா, “ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை ஷிண்டே அணி என்று தனியாக குறிப்பிட வேண்டியிருந்தது. ஆனால் இனி அதற்கு அவசியம் இல்லை. தற்போது பிரிவு என ஏதும் இல்லை. இருப்பது ஒரேயொரு சிவசேனா மட்டும்தான். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாதான் உண்மையான சிவசேனா.
காங்கிரஸ் தலைவர்களும், காங்கிரசின் மடியில் அமர்ந்திருக்கும் உத்தவ் ஜியும், ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கியாக மாற்றுதன் மூலமாக, தங்கள் இருப்பை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல. ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் அடையாளம் காணப்பட்டு நாட்டிலிருந்து வௌியேற்றப்படுவார்கள். இந்த நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வாழ்வார்கள்” என்று தெரிவித்தார்.
