தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை பலி

திருவொற்றியூர், ஜூன் 6: திருவொற்றியூர் பாலகிருஷ்ணன் நகர், செல்வ விநாயகர் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர், ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி கீர்த்தனா. இவர்களது 3 மாத ஆண் குழந்தை சர்வேஸ்வரனுக்கு, நேற்று அதிகாலையில் கீர்த்தனா பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்தார். பின்னர், 8 மணியளவில் குழந்தையை எழுப்ப முயன்றபோது, குழந்தை அசைவில்லாமல் இருந்தது. இதனைக் கண்ட கீர்த்தனா பதறியடித்து குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த திருவொற்றியூர் காவல் நிலைய போலீசார், குழந்தை உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: