ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீபவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் அதிக அளவு பக்தர்கள் கூட்டம் வந்தது. மேலும், பெரியபாளையம் பகுதியில் நேற்று போக்குவரத்து போலீசார் இல்லாததால், பெரியபாளையம் பாலத்திலும், பஜார் பகுதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மட்டுமின்றி அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூறுகையில், “பெரியபாளையம் கோயிலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வந்தோம். வாகனங்களை விடுவதற்கு சிரமமாக இருந்தது. 3 முதல் 4 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் நாங்கள் அவதியடைகிறோம்” என்றனர்.