தொட்டியம், மார்ச் 7: தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கை குறித்து தினகரனில் வெளியிட்ட செய்தி எதிரொலியாக வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வடுகப்பட்டி என்ற இடத்தில் காவிரி ஆற்றிலிருந்து காட்டுப்புத்தூர் ராஜவாய்க்கால் தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் வழியாக வரும் தண்ணீர் மூலம் 4,500 ஏக்கர் அளவிலான நிலங்கள் பயன் பெறுகிறது. குறிப்பாக வடுகப்பட்டி, உன்னியூர், மஞ்சமேடு, சின்ன பள்ளிபாளையம், காட்டுப்புத்தூர், காடுவெட்டி, நத்தம், பாலசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாய பாசன நிலங்கள் பயன்பெறும் நிலையில் வாய்க்காலில் தண்ணீர் வராமல் இருந்தது.