அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாததால் திமுக கூட்டணியில் இடம்பெற்று, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சட்டசபையில் முதல்வர் விஜய் பெரும்பான்மையை நிரூபித்தார். அன்றைய தினம் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவை சேர்ந்த 25 எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தனர்.

தவெகவுக்கு ஆதரவு கொடுத்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் தரப்பில் இருந்து உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், 3ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லாமல் தவெகவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தால், அவர்களது எம்எல்ஏ பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து தவெகவிடம் இருந்து இனி அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியிடம் 25 எம்எல்ஏக்களும் சரண்டர் அடைந்தனர். மன்னிப்பு கடிதம் கொடுத்து கட்சியில் சேர்ந்து கொண்டனர். ஆனால், 25 அதிமுக எம்எல்ஏக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி இன்னும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அவர்கள் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று விஜய் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 21 அதிமுக எம்எல்ஏக்களின் மன்னிப்பு கடிதத்தை ஏற்று, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் அதிமுக எம்எல்ஏக்களாக தொடர்வார்கள். அதேநேரம், அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது ராஜினாமா செய்துள்ள 4 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான பணிகள் தொடங்கி உள்ளது என்றார்.

இதையடுத்து ராஜினாமா செய்த ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 4 பேருக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கடந்த 9ம் தேதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த 4 எம்எல்ஏக்களின் பதிலை பொறுத்து, அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதிநீக்க நடவடிக்கை தொடங்குவது குறித்து சபாநாயகர் இறுதி முடிவு எடுப்பார்.

அதேநேரம், தேர்தல் அறிவிப்புக்கு முன், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், வருகிற இடைத்தேர்தலில் 4 எம்எல்ஏக்களும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதிலும் சிக்கல் வரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தவெக ஆட்சிக்கு மீண்டும் பெரும்பான்மை கிடைப்பதிலும் பிரச்னை எழுந்துள்ளது.

Related Stories: