சென்னை: அதிமுகவுடன் அமமுகவை இணைப்பதற்கான சூழ்நிலை வந்திருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் எங்கள் தலைமை கழக நிர்வாகிகள் யாரும் பேசவில்லை டிடிவி.தினகரன் தெரிவித்தார். சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு சில மாவட்டங்களில் நிர்வாகிகள் வேறு கட்சியில் இணைந்துள்ளனர்.
அங்கு சென்றபோது கூண்டோடு கலைந்து விட்டோம் என்று எல்லாம் தெரிவித்தார்கள், ஆனால் அது உண்மை இல்லை. 2017ம் ஆண்டு அதிமுக துணைப் பொது செயலாளராக இருந்தேன், ஆனால் 2 மாதத்தில் கட்சியை விட்டு நீக்கினார்கள். அப்பொழுதும் அவர்களுடன் தான் செயல்பட்டேன். 6 மாதம் காத்திருந்தேன், சிறைக்குச் சென்று வந்தேன். அதற்குப் பிறகு அமமுக தொடங்கப்பட்டது. 9 ஆண்டு காலம் கட்சி நடத்தி வருகிறோம்.
2021 அமித்ஷா அழைத்து இணைந்து செயல்பட வேண்டும் என்று சொன்ன சமயத்தில் கூட, கூட்டணிக்கு வேண்டுமானால் வருகிறேன் என்றேன். ஆனால் அப்போது அது நடக்கவில்லை. மீண்டும் 2026ம் ஆண்டு ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூட்டணிக்கு அழைத்தார். அதன் அடிப்படையில் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று முயற்சி செய்தோம், இப்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். அவர்களுடன் தான் பயணிக்கிறோம். அதிமுகவுடன் இணைப்பதாகச் சூழ்நிலை வந்திருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் எங்கள் தலைமை கழக நிர்வாகி அல்லது மாவட்ட நிர்வாகி யாரும் பேசவில்லை. இந்த கடினமான காலத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறோம்.
