இறைத்துதி செய் மனமே!

“இறைத்தூதர் அவர்களே, என் பார்வையில் மார்க்கச் சட்டங்கள் கொஞ்சம் அதிகம் இருப்பதுபோல் தெரிகிறது. என் இயலாமை காரணமாக அவை அனைத்தையும் என்னால் நிறைவேற்ற முடியாமல் போகிறது. நான் அவற்றை உறுதியாகச் செயல்படுத்துவதற்கு ஒரு வழிமுறையைக் கூறுங்கள்” என்று தோழர் ஒருவர் கேட்டார்.
உடனே நபிகளார்(ஸல்) அவர்கள், “உமது நாவு இறைத்துதியால் எப்போதும் நனைந்தே இருக்கட்டும்” என்றார்.(திர்மிதீ)
எத்துணை அழகான வழிமுறை. இறைவன் அருளிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் முதலில் இறைவனின் நினைவு நம் உள்ளங்களில் பசுமையாக இருக்க வேண்டும். அதற்கு வழிவகுப்பது ‘திக்ர்’ எனும் இறைதியானம்தான். இறைத்துதிதான்.
நம்முடைய அன்றாட வாழ்விலும் இதைச் சோதித்துப் பார்க்கலாம். நண்பர் ஒருவர் ஐவேளைத் தொழுகையில் சற்று அலட்சியமாக இருந்தார். ஒரு வேளை தொழுதால் மறுவேளை தொழுவார் என்பது நிச்சயமல்ல. இந்தக் குறையைப் போக்குவதற்கு என்ன செய்வது என்று என்னிடம் ஆலோசனை கேட்டார்.
“இறைவனை அதிகம் தியானித்துக் கொண்டிருங்கள். நடக்கும் போது, உட்காரும் போது, கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஓய்வு எடுக்கும்போது, படுக்கும்போது என எல்லா நிலைகளிலும் இறைத்துதியில் ஈடுபடுங்கள்” என்று சொல்லி அவர் எளிமையாக ஓதிவருவதற்கு இறைதியானச் சொற்கள் சிலவற்றையும் கற்றுத்தந்தேன்.
நண்பர் அதேபோல் செய்துவந்தார். நாளடைவில் தொழுகையில் அவர் காட்டிவந்த அலட்சியம் நீங்கியது. அவர் ஓதிவந்த இறைத்துதிச் சொற்கள் அவருடைய உள்ளத்தில் இறை உணர்வை மலர வைத்தன. அந்த இறையுணர்வு வழிபாடுகளை நோக்கி அவரை உந்தித் தள்ளியது. இப்போது அவர் ஒரு நேரத் தொழுகையைக்கூட விடாமல் முறையாக ஐவேளையும் தொழுது வருகிறார்.
ஒரு முறை இறைத்தூதர் அவர்களிடம்,“மறுமை நாளில் இறைவனிடம் உயர் அந்தஸ்து பெற்ற அடியார் யார்?” என்று வினவப்பட்டது. “இறைவனை அதிகமாக நினைவுகூரக்கூடிய ஆண்களும் பெண்களும்” என்று நபிகளார் பதில் கூறினார்கள்.
“இறைவனின் தூதரே..! இறைவழியில் அறப்போரில் ஈடுபடும் போராளியைவிட இறைவனை தியானிப்பவர்கள் சிறந்தவர்களா?” என்று ஒரு தோழர் கேட்டார்.
“ஆம். போராளி ஒருவர் இறைவழியில் தம் வாள் உடைந்து இரத்தம் சிந்தி வீரமரணம் அடையும்வரை போரிட்டாலும்கூட இறைவனைத் தியானிப்பவர்கள் அவரைவிட உயர்தகுதி பெற்றவர்களாகத் திகழ்வார்கள்” என்று இறைத்தூதர் விளக்கம் அளித்தார். (திர்மிதீ)
“உங்கள் இறைவனிடம் உங்களின் படித்தரத்தை உயர்த்துகின்ற, தங்கம்-வெள்ளியைச் செலவு செய்வதைவிட உங்களுக்குச் சிறப்பு சேர்க்கின்ற, அறவழியில் போர் புரிவதைவிட சிறந்த செயல் ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?” என்று நபிகளார் தம் தோழர்களை நோக்கிக் கேட்டார்கள்.
தோழர்கள், “ஆம்…சொல்லுங்கள் இறைத்தூதர் அவர்களே” என்றனர்.
உடனே நபிகளார், “உயர்ந்தோனாகிய இறைவனை தியானம்(திக்ர்) செய்து வாருங்கள்” என்றார்.
இறைவனைத் தியானிப்பதற்குக் குறிப்பிட்ட நேரம், காலம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. இருபத்து நான்கு மணி நேரமும் இறைவனை நினைவுகூரலாம். துதிபாடலாம். நம் இதயமும் நாவும் எப்போதும் இறைநினைவால் நனைந்திருக்கட்டும்.
இந்த வார சிந்தனை
“இறைவனைப் போற்றித் துதிப்பவர்களை நிச்சயம் வானவர்கள் சூழ்ந்து கொள்வார்கள். அவர்களை இறையருள் மூடிக் கொள்ளும். அவர்கள் மீது அமைதி இறங்கும்.” நபிமொழி (திர்மிதீ)
– சிராஜுல்ஹஸன்

Related Stories: