சேந்தமங்கலம், மார்ச் 7: கொல்லிமலையில் டூவீலர் மீது டூரிஸ்ட் வேன் மோதியதில், மளிகை வியாபாரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரியூர்நாடு மேல்கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(37), மளிகை கடை நடத்தி வந்தார். இவரது உறவினர்கள் பாலகிருஷ்ணன்(40), கஜேந்திரன் (49) ஆகியோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, ஒரே டூவீலரில் 3 பேரும் அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். வழியில் தொம்பளம் ஓசாணி நகர் என்ற இடத்தில், வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிரே ராணிப்பேட்டையில் இருந்து கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த டூரிஸ்ட் வேன், செந்தில்குமாரின் டூவீலர் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செந்தில்குமார், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.