போபால்: மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில் அந்த அடிப்படையில் 3 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. 230 உறுப்பினர்களைக் கொண்ட மபி சட்டப்பேரவையில் உள்ள கட்சியின் பலத்தின் அடிப்படையில், பாஜ இரண்டு இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் எளிதாக வெல்லும் நிலையில் உள்ளன. இந்த தேர்தலில் தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் ஆகியோரை பா.ஜ வேட்பாளராக அறிவித்தது. காங்கிரஸ் சார்பில் மீனாட்சி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், மூன்றாவது இடத்தைக் கைப்பற்றுவதில் குறிவைத்துள்ள பா.ஜ திடீரென காங்கிரஸின் வேட்பாளர் மீனாட்சி நடராஜனை எதிர்த்து பாஜ சார்பில் மகேஷ் கேவத்தை களமிறக்கியுள்ளது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் தற்போதைய பலம் 228 ஆகும்.
இதில் பாஜவிடம் 164 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸிடம் 64 எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு வேட்பாளர் வெற்றிபெற 58 வாக்குகளைப் பெற வேண்டும். இரண்டு இடங்களை வெல்ல பாஜகவுக்கு 116 வாக்குகள் தேவை; அதன்பிறகு 48 வாக்குகள் உபரியாக இருக்கும். ஆனால், மீனாட்சி நடராஜனை எதிர்த்து மகேஷ் கேவத் ெவற்றி பெற தேவைப்படும் கூடுதல் 10 வாக்குகள் பா.ஜவிடம் இல்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்தியில் பிளவை உருவாக்கி, வெற்றி பெற பா.ஜ முயற்சி செய்வதாக தெரிகிறது.
