நாசரேத், மார்ச் 6: நாசரேத், காயல்பட்டினத்தில் கடைகளில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் மீட்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் 5ம் தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் (71). மர்காஷிஸ் சாலையில் ரெடிமேட்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு பிப்.19ம் தேதி வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 6 தலையணைகளை கேட்டுள்ளார். கடையில் 4 தலையணைகளே இருந்ததால் அவைகளை அந்த வாலிபரிடம் கொடுத்த தர்மராஜ், மீதி 2 தலையணைகளை அருகில் உள்ள வீட்டிலிருந்து எடுத்து வருவதாகவும், அதுவரை கடையில் காத்திருக்குமாறும் கூறி விட்டு சென்றார்.திரும்பி வந்து அவர் பார்க்கும் போது, கடையில் அந்த வாலிபரை காணவில்லை. ஆனால் அவரிடம் கொடுத்த 4 தலையணைகள் அப்படியே கடையில் இருந்தன. உடனே தர்மராஜ், கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை பார்வையிட்டார். அதில் தலையணை வாங்க வந்த வாலிபர், கல்லாபெட்டியிலிருந்த ரூ.9,400 கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தர்மராஜ் நாசரேத் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து கொள்ளையனை பிடிக்க தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில், சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ்குமார் ஆலோசனையின் பேரில் நாசரேத் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீசார் பிரேம்குமார், கணேசன், மணிகுமரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தர்மராஜ் கடை மற்றும் நாசரேத்தின் முக்கிய தெருக்களில் உள்ள சிசிடிவி காமிராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காமிராவில் பதிவான கொள்ளையனின் புகைப்படத்தை தங்கள் வாட்ஸ் அப்பில் பதிவிட்டு தேடி வந்தனர்.