நொய்டா: உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பல்வேறு வட மாநிலங்களில் இருந்து பலரும் இங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
நொய்டாவின் செக்டார் 74 பகுதியில் உள்ள ஐவி கவுண்டி (Ivy County) என்ற 28 மாடிக் குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது. இன்று காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதனால் வானத்தில் அடர்த்தியான கருப்புப் புகை சூழ்ந்தது. இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு பல மணி நேர போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதனிடையே இந்த தீ விபத்து ஏற்பட்ட அடுத்த 15 நிமிடங்களில், நொய்டாவின் செக்டார் 52இல் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திலும் தீவிபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் தரை தளத்தில் உணவகம் மற்றும் மேல் தளம் மாணவர்கள் தங்கும் விடுதியும் உள்ளது. இந்த நிலையில் தீவிபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
