திருப்பூர், மார்ச் 6: திருப்பூர் தெற்கு சட்டமன்றத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் கூறியுள்ளதாவது: திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி எல்லைக்கு உட்பட்ட மண்டபங்களில் தனி நபர்களால் திருமண நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் முடியும் வரை முன்பதிவு செய்யப்பட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினரால் வாக்காளர்களுக்கு விருந்தளித்தல், பரிசு பொருட்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கக்கூடாது. திருமண மண்டபங்களில் அன்னதானம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது. திருமண நிகழ்ச்சிகளின் போது அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றுடன் கூடிய விளம்பர பேனர்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை திருமண மண்டபங்களில் வைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. மேற்கண்ட நடவடிக்கைகளை மீறும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீ்ழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.