கொரோனாவை தடுப்போம் ஓவிய போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா

அறந்தாங்கி, மார்ச் 5: விழிப்போடு இருப்போம்- கொரோனாவை தடுப்போம் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் விழிப்போடு இருப்போம் கொரோனாவை தடுப்போம் என்ற தலைப்பில் நடந்த ஓவிய போட்டியில் வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆவுடையார்கோவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அனிதா முன்னிலை வகித்தார்.

அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் தலைமை வகித்து ஓவிய போட்டியில் முதலிடம் பெற்ற குமுளுர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி காருண்யா, இரண்டாமிடம் பிடித்த கள்ளக்காத்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி கீர்த்திகா, மூன்றாமிடம் பிடித்த காரணியானேந்தல் மாணவி பஷீரா ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ், பட்டயங்களை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் தேவகி, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.

அறந்தாங்கி அடுத்த மணமேல்குடி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் விழிப்போடு இருப்போம் கொரோனாவை விரட்டுவோம் எனும் தலைப்பில் ஓவியப்போட்டி நடந்தது. இதில் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி தரணிகா ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்தார். அவருக்கு மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் தனலட்சுமி, தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர் சீனிவாசன், ஆசிரியர் பயிற்றுனர்கள் அலெக்ஸ் பாண்டியன், ஆனந்த், சரண்யா, ஜெயலட்சுமி, உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: