ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு வைகாசித் திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினசரி வைத்தியநாதசுவாமி சுவாமி-அம்பாள் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். வீதியுலா புறப்பாடும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக தயார் செய்யப்பட்ட 2 தேர்களில் ஒன்றில் பிரியாவிடையுடன் சோமாஸ்கந்தர் சுவாமியும், மற்றொரு தேரில் அம்பாளும் எழுந்தருளினர்.
இதை தொடர்ந்து ஒவ்வொரு தேராக பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேர் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை காணவும், வடம் பிடித்து இழுக்கவும் காலை முதலே பக்தர்கள் குவிந்தனர். தேரோட்டத்தில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் பங்கேற்று இரண்டு தேர்களையும் வடம் பிடித்து இழுத்தனர். இதனை முன்னிட்டு நகர் இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நிர்வாக அதிகாரி தேவி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
