தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமன், பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். பின்னர், நிரந்தர டிஜிபியை நியமிக்க விரும்பிய தமிழக அரசு, 10 பேர் கொண்ட டிஜிபிக்களின் பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. அதில் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியபெருமாள் ஆகியோரில் ஒருவரை டிஜிபியாக நியமிக்கும்படி ஒன்றிய அரசு, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இந்தப் பட்டியலை தமிழக அரசு ஏற்கவில்லை.

அதில் சந்தீப் ராய் ரத்தோர், வன்னியபெருமாள் ஆகியோருக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் அவர்களது பெயரை மாற்றி விட்டு புதிய பட்டியலை அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து மீண்டும் ஒன்றிய அரசு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. ஆனால் கூட்டத்தை ஒன்றிய அரசு நடத்தவில்லை. தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தலைமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நாளை மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பு ஏற்க உள்ளார். சிபிஐ, சிபிசிஐடி உட்பட முக்கிய புலனாய்வு அமைப்புகளில் பணிபுரிந்தவர் மகேஷ்குமார் அகர்வால். 1994ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்; 22 வயதிலேயே ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியானவர். சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

தேனி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, சென்னை பூக்கடை துணை ஆணையர், மதுரை காவல் ஆணையராக இருந்தவர். தற்போது புதுடெல்லியில் எல்லைப் பாதுகாப்பு படை டிஜிபியாக பணியாற்றி வருகிறார் மகேஷ் குமார் அகர்வால். தனது சிறந்த பணிகளுக்காக குடியரசுத் தலைவரின் பதக்கம் உள்ளிட்டவற்றை மகேஷ்குமார் அகர்வால் பெற்றுள்ளார்

Related Stories: