வைபவ் சூர்யவன்ஷிக்கு கெயில், சச்சின் பாராட்டு

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் அவர் 12 சிக்சர்கள் விளாசினார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்கள் (65) விளாசி, கிறிஸ் கெயிலின் சாதனையை (59 சிக்சர்) முறியடித்தார். 2012ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில், 15 ஆட்டங்களில் 59 சிக்சர் அடித்திருந்தார். அந்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு, புனே அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அந்த சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்பை தவற விட்ட சூர்யவன்ஷி, 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் தனது 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த சூர்யவன்ஷிக்கு கெயில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெயில் தனது எக்ஸ் தள பதிவில், வைபவ் சூர்யவன்ஷி எத்தனை ஒரு அற்புதமான வீரர். மிகச்சிறந்த பொழுதுபோக்கு. அவர் புதிய சிக்சர் இயந்திரம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அதேபோல், சச்சின் டெண்டுல்கரும், சூர்யவன்ஷியை வெகுவாக பாராட்டியுள்ளார். `வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் மிகச் சிறப்பாக உள்ளது. குறிப்பாக கால்களை நோக்கி வரும் பந்துகளை எதிர்கொள்ள அவர் தனது முன்னங்கால்களை நகர்த்தி, இடம் உருவாக்கும் விதம், அற்புதமாக இருக்கிறது. இந்த சுதந்திரமான அணுகுமுறை தான், அவரை இவ்வளவு துணிச்சலாக விளையாட வைக்கிறது. அவரது இந்த இன்னிங்ஸ் பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது,’ என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: