சென்னை: பள்ளிகள் திறக்கப்பட உள்ள ஜூன் 1ம் தேதி கல்வியாண்டில் மாணவர்களுக்கு அனைத்து விலையில்லா நலத்திட்ட பொருட்கள் வழங்க அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தி உள்ளார். சென்னை, சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், 2026-27ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட விலையில்லா நலத்திட்ட பொருட்களை பள்ளிக்கு நேரடியாக விநியோகம் செய்யும் பணியினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் ஜூன் 1 திறக்கப்பட உள்ளன. இதை தொடர்ந்து 2026-27ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப் பைகள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் அனைத்து மாவட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாவட்ட மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு நேரடியாக நலத்திட்ட பொருட்களை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
வருகிற ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நாளில் 2026-27ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள அனைத்து விலையில்லா நலத்திட்ட பொருட்களும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபிர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
