ஒன்றிய அரசின் குரலாக ஒலிப்பதுபோல் தோன்றுகிறது: தனியாரிடம் மின்சாரத்தை ஒப்படைக்க திட்டமா? மக்கள் பிரச்னையை தீர்க்க புதிய அரசு முன்வர முன்னாள் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்

 

சென்னை: மக்கள் உங்களிடம் பவரை கொடுத்து விட்டனர். பவர் கட் இருக்கக் கூடாது என்பதுதான் மக்கள் கேட்பது, தவெக ஒன்றிய அரசின் குரலாக ஒலிப்பது போல் தோன்றுகிறது என்று திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கூறினார். முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நேற்று முன்தினம் வெளியிட்ட வீடியோ: தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் தொடர்ந்து மின்வெட்டு என்று சமூக வலைதளங்களில் கடும் புகார் எதிரொலித்து வருகிறது.

அதேபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதே குரல் கேட்டு வருகிறது. இதுகுறித்து அரசியல் ரீதியாக யாரும் விமர்சனம் செய்யவில்லை, சமூக வலைதளங்களில் வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்கின்ற வகையில் புதிதாக பொறுப்பேற்ற உள்ள மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் துறைக்கு இருக்கும் கடன் குறித்தும், துறையில் இருக்கும் பிரச்னைகள், பணியாளர்கள் பற்றாக்குறை பற்றியெல்லாம் பல இடங்களில் பேசுகிறார்.

ஆட்சி அமைத்து 20 நாட்கள் ஆகிவிட்டது, மின்பற்றாக்குறை இருக்கிறதா என்று ஆய்வு கூட்டம் நடத்தி அதற்கான முடிவு எடுத்திருந்தால் பிரச்னைகள் வந்து இருக்காது. ஆனால் இதே பணியாளர்கள் பற்றாக்குறையோடு, கடனோடு தான் திமுக அரசு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகள் மின்பற்றாக்குறை பிரச்னை, மின்வெட்டு பிரச்னைகள் இல்லாமல் தமிழ்நாட்டிற்கு சீரான முறையில் மின்சாரம் வழங்கி வந்தது.

ஏதோ புதிதாக வேறு உலகத்தில் இருந்து வந்தவர்கள் போல் பேசுகின்றனர். இது என்ன சந்தேகத்ைத எழுப்புகிறது என்றால் ஒன்றிய அரசின் குரலாக இருக்கின்றதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசு தான் மொத்த இந்தியாவையும் தனியார் மயமாக்குவதற்கு துடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

அவர்கள் ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களில் தனியாரிடத்தில் மின்சாரத்தை ஒப்படைத்தது போல் இந்தியாவின் மற்ற மாநிலங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தி அதற்கான நடவடிக்கை எடுத்து வந்தார்கள். அப்போது அன்றைக்கு முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தான் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து கடிதம் எழுதினார். ஆனால் இன்றைக்கு பொறுப்பேற்று இத்தனை நாட்கள் ஆகியும் அதற்கான தீர்வு என்ன என்பதை பார்க்காமல் கடந்த ஆட்சியாளர்களை குறை செல்வது போல் புதிதாக ஆட்சியில் பற்றாக்குறை இருப்பது போல் பேசிக் கொண்டு இருப்பது தேவையற்றது.

மக்கள் உங்களிடம் பவரை கொடுத்து விட்டனர். பவர் கட் இருக்கக் கூடாது என்பது தான் மக்கள் கேட்பது, தமிழக மின்சாரத்துறையில் பணி செய்பவர்கள் அலுவலர்கள் சிறப்பாக பணி செய்பவர்கள், அவர்களுக்கு தெரியும். எந்த பிரச்னையை எப்படி தீர்க்க வேண்டும் என்று. அவர்களை அழைத்து பேசி மக்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கலாம்.

இவர்கள் ஏதோ உள்நோக்கத்தோடு ஒன்றிய அரசின் குரலாக ஒலிப்பது போல் தோன்றுகிறது. எனவே மக்களுக்கான பிரச்னையை தீர்ப்பதற்கு இந்த அரசு முன்வர வேண்டும். மக்கள் கேட்பது எல்லாம் தடையற்ற மின்சாரம். அதை வழங்குவதற்கு இவர்கள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சிவசங்கர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Related Stories: