திருவண்ணாமலை, மார்ச் 3: தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், சட்டமன்ற தேர்தலில் சுகாதாரத்துறையினரின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ முத்துகுமாரசாமி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் கண்ணகி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் அஜீதா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்ததாவது: கொரோனா தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், தேவையான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, இந்த தேர்தலில் சுகாதாரத்துறையினரின் பணி மிகவும் முக்கியமாகும்.
வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்தல், கைகளை கிருமி நாசினியால் தூய்மை செய்தல், உடல் வெப்ப பரிசோதனை செய்தல் போன்றவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும்.