ஓசூர், மே 20: ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 626 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அதில் 104 வாகனங்களின் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, பழுதுகள் சீரமைத்து மீண்டும் ஆய்வுக்கு உட்பட்ட அறிவுறுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தனியார் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆண்டாய்வு, சப் கலெக்டர் ஆக்ரிதி சேத்தி தலைமையில் நடைபெற்றது. இதில், நல்லூர் இன்ஸ்பெக்டர் லதா, ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, தீயணைப்பு மற்றும் முதலுதவி தொடர்பாக நிலைய அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் தீயணைப்பு துறையினரால் தீ தடுப்பு தொடர்பான செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஓசூர் சப் கலெக்டர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர், விபத்தில்லாமல் வாகனம் இயக்குவது குறித்து அறிவுறுத்தினர். முதல் கட்டமாக 626 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 104 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இதில், ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, சாலை பாதுகாப்பு மற்றும் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கினர்.
