நன்றி குங்குமம் டாக்டர்
மருதாணியை விரும்பாத பெண்களே இருக்க இயலாது. கைகளுக்கு அழகு தருவதோடு உடலுக்கும் பல்வேறு மருத்துவ பலன்களைத் தருகிறது. இந்தக் கோடைக்காலத்தில் மருதானியை இட்டுக் கொள்ள உடல் சூடு தணிந்து குளிர்ச்சியடைவதோடு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
மருதாணி நகச்சுத்தி வராமல் தடுக்கும். எந்தவித புண்ணையும் ஆற்ற வல்லது. மருதாணி இலைகளை அரைத்து கை, கால், உள்ளங்காலில் வைத்து வர, உடல் வெப்பம் தணியும். கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவதைக் குறைக்கும்.
மருதாணி இலையை சுடுநீரில் ஊற வைத்து பின்னர் நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாக தொடங்கும்.கால் எரிச்சலைத் தடுக்க இலைகளை அரைத்து பசைப்போல் தடவிவர கால் எரிச்சலை தடுக்கும். மருதாணி இலையை அரைத்து சிறிய தீப்புண், தோல் புண்கள் மீது தடவி வர விரைவில் ஆறிவிடும்.
கொப்புளங்கள், அரிப்பு, கரும்படை, வண்ணான்படை இவற்றுக்கு மருதாணியை வேப்பிலை மஞ்சளுடன் அரைத்து தடவி பின் குளித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.மருதாணி இலைகளை அரைத்து வடை போல் தட்டி மிதமான வெயிலில் காய வைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை தலையில் தடவிவர, பொடுகு, இளநரை மாறுவதுடன் முடி வளர்ச்சியை தூண்டும்.
நகங்களை பாதுகாக்க, சொரி, சிரங்கிலிருந்து பாதுகாப்பு கிடைக்க, மருதாணியை அடிக்கடி வைத்துக் கொள்ளலாம்.மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும். இவற்றின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை மருத்துவ பயன்களைக் கொண்டது.
மருதாணி இலைகள் தசையை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக ரத்தப்போக்கினை தடுக்கும். உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.
மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.
தொகுப்பு: – மகாலட்சுமி சுப்ரமணியன்
