திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் அதி பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும். இந்தக் கோயிலுக்கு அருகே ஹெலிகாப்டர் பறக்கவோ டிரோன்களை பறக்க விடவோ அனுமதி கிடையாது. இந்நிலையில் கடந்த மாதம் சபரிமலை கோயிலுக்கு மிக அருகே கடலோர காவல் படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் பறந்தது. மேலும் அதிலிருந்தவர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலை புகைப்படமும் எடுத்தனர். இதுகுறித்து சபரிமலை சிறப்பு ஆணையாளர் கேரள உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காலநிலை மோசமாக இருந்ததால் திசை மாறி ஹெலிகாப்டர் சபரிமலை கோயில் அருகே சென்றுவிட்டது என்று கடலோர காவல் படை சார்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விளக்கத்தை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்தது. தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே கடலோர காவல் படை நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஒரு உயர் அதிகாரி சபரிமலை கோயிலை ஆகாயத்தில் இருந்து தரிசிப்பதற்காகவே ஹெலிகாப்டரை அந்தப் பகுதிக்கு கொண்டு சென்றார் என தெரியவந்தது. இதை தொடர்ந்து சம்பவத்தன்று ஹெலிகாப்டரில் சென்ற உயரதிகாரி உள்பட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
