நெல்லை, மே 14: ஆழ்வார்குறிச்சியில் மாடுகளுக்கு இடையே சண்டை காரணமாக பசுமாட்டை வெட்டிய முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நாராயணசுவாமி கோயில் சன்னதி தெருவை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவர் சொந்தமாக 3 பசுமாடுகள் வைத்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது பசுமாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அன்று மாலையில் அவரது வீட்டுக்கு 2 மாடுகள் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. ஒரு மாட்டை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் தெருவில் சென்று பார்த்தபோது அங்குள்ள வள்ளுவர் நகரில் அந்தோணி (78) வீடு முன்பு அவரது பசுமாடு காலில் அரிவாள் வெட்டு பட்டு கிடந்தது. இதுதொடர்பாக அவர் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில், அந்தோணி என்பவரின் மாட்டுடன் முருகனின் மாடு சண்டையிட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்தோணி அந்த மாட்டை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
