புதுடெல்லி: அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஒன்றிய எண்ணெய் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) வருடாந்திர வணிக உச்சிமாநாட்டில் நேற்று பங்கேற்று பேசியதாவது:
ஈரான் போரால் நெருக்கடி தொடங்கிய போதே, இந்தியாவிடம் தேவைக்கும் அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு கையிருப்புகள் இருந்தன. அதன்பிறகு உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை ஒருநாளுக்கு 36,000 டன்களில் இருந்து 54,000 டன்களாக உயர்த்தி உள்ளோம். தற்போது இரண்டு மாதத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
ஆனால் சில்லறை எரிபொருள் விலைகளை அதிகரிக்காமல் வைத்திருப்பதால் ஏற்படும் நிதி நெருக்கடி அதிகரித்து வருகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது ஒருநாளுக்கு ரூ.1000 கோடி இழப்பை சந்திக்கின்றன. நடப்பு நிதியாண்டில் வருவாய் இழப்பு ரூ.1.98 லட்சம் கோடி. இதில் ஒரே காலாண்டில் ஏற்படும் இழப்பு ரூ.1 லட்சம் கோடி. இது இத்துறையின் ஓராண்டு லாபத்தை முழுமையாக விழுங்கி விடக்கூடும். எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் எவ்வளவு காலம் இதை தாங்கிக் கொள்ளும் என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.
எரிசக்தி பயன்பாட்டை குறைப்பதற்கான பிரதமர் மோடியின் அழைப்பை, கட்டுப்பாடுகளாக கருதாமல், தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட கால அணுகுமுறையாக பார்க்க வேண்டும். நாளைக்கே எந்த ஊரடங்கும் வரப்போவதில்லை. ஆனால் போர் தொடர்ந்தால் நிதிச் சுமையை குறைப்பதற்கான நடவடிக்கைகளைப் பற்றி நாம் சிந்திக்க தொடங்க வேண்டும் என்றார்.
* இந்தியா சமாளிக்கும்
சிஐஐ மாநாட்டில் பேசிய ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன், ‘‘மேற்கு ஆசியா நெருக்கடி என்பது பொருளாதார திட்டமிடலில் பாதிப்பை ஏற்படுத்தும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த கவலை அல்ல. இது பணவீக்கம், கரன்சி மதிப்பு ஆகியவற்றில் நேரடி விளைவுகளை ஏற்படுத்தும். இதை சமாளிக்கக் கூடிய சிறந்த நிலையில் இந்தியா உள்ளது’’ என்றார்.
