ராசிபுரம், மார்ச் 1: ராசிபுரம் மாநில அளவில் அதிக கல்வி நிலையங்களை கொண்ட ஊராக திகழ்கிறது. இதனால், ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். கொரோனா பெருந்தொற்றால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், ஓரளவுக்கு போக்குவரத்து குறைந்த நிலையில், தளர்வுகளுக்கு பிறகு நகரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ராசிபுரத்தில் குறுகலான சாலைகளால், எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படும். கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு, தற்போது பொது போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியுள்ளதால், வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. ராசிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விசைத்தறி, விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மேலும், ராசிபுரம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வெளியூர்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் பெரும்பாலான அரசு, தனியார் பஸ்கள், லாரிகள், கனரக வாகனங்கள் ராசிபுரம் வழியாகவே இயக்கப்படுகின்றன. இதனால் ராசிபுரம் நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.