தர்மபுரி, மே 7: தர்மபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கடைகளில் மாம்பழ விற்பனை ேஜாராக நடக்கிறது. இதனை வாகன ஓட்டிகள், பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், 30 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர் வட்டாரங்களில் மா அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மா விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து, விளைச்சல் எடுத்து வருகின்றனர். நடப்பாண்டில் பூச்சித்தாக்குதல், பனிப்பொழிவு, அனல்காற்று, கொளுத்தும் வெயில் மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றங்கள் போன்றவற்றால் மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டு விளைச்சல் சீராக உள்ளது.
தற்போது மாங்காய், மாம்பழங்கள் மண்டிக்கு விற்பனைக்கு வந்துள்ளன. மண்டிகளில் இருந்து வியாபாரிகள் மாங்காய்களை வாங்கி சென்று கடை, சந்தை மற்றும் சாலையோர கடைகளில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மாட்லாம்பட்டி – காரிமங்கலம், சப்பானிப்பட்டி வரை சாலையோரங்களில் வியாபாரிகளும், விவசாயிகளும் மாம்பழங்களை குவித்து வைத்து விற்பனை செய்கின்றனர். சேலம் மற்றும் பெங்களூரு மார்க்கமாக செல்லும் நபர்கள், வாகனங்களை நிறுத்தி மாம்பழங்களை வாங்கி செல்கின்றனர். சீசன் தொடங்கியுள்ளதால், 10க்கும் மேற்பட்ட ரகங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், `தற்போது மாம்பழ ரகங்கள், அதிகம் விற்பனைக்கு வந்துள்ளன. மாம்பழம் வரத்தும் சீராக உள்ளது. இதனால், பொதுமக்கள் மாம்பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ செந்தூரா ரூ.60, சேலம் பெங்களூரா ரூ.170 வரையும், இமாம்பசந்த் ரூ.130 வரையும், மல்கோவா தரத்தின் அளவைப் பொறுத்து ரூ.120 முதல் ரூ.130 வரையும், சேலம் மல்கோவா ரூ.100, அல்போன்சா ரூ.100, பீத்தர் ரூ.60 வரையும் விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.
வழக்கமாக பங்குனி, சித்திரை, வைகாசி என 3 மாதங்களில் மாம்பழங்கள் விற்பனை ஜோராக நடக்கும். நடப்பாண்டில் மா சீசன் தாமதமாக தொடங்கியதால், தர்மபுரி சந்தையில் கிருஷ்ணகிரியில் இருந்து சக்கரை குட்டி ரக மாம்பழம் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இவை கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
