பள்ளிபாளையம் நகராட்சி ஆபீஸ் முன் ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் காவல்துறை அலட்சியம்

பள்ளிபாளையம், மே 7: பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு, ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்தாமல் காவல்துறை அலட்சியம் காட்டுவதால் அன்றாடம் மேம்பாலத்தில் விபத்துகள் ஏற்படுகிறது. பள்ளிபாளையத்தில் 480 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் திறக்கப்பட்டு ஒரு வருடமாகிறது. இந்த பாலத்தில், ஈரோட்டிலிருந்து திருச்செங்கோடு, சங்ககிரி செல்லும் வாகனங்கள் செல்கின்றன. சங்ககிரியிலிருந்து செல்லும் வாகனங்கள் பாலத்தில் ஏறாமல், தரைவழியாக காவிரி ஆற்றை கடந்து ஈரோடு செல்லும் வகையில் ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சங்ககிரி பகுதியிலிருந்து ஈரோடு செல்லும் வாகன ஓட்டிகள் இதை பொருட்படுத்துவதில்லை. சங்ககிரி சாலையில் வரும் கார்கள், லாரிகள், டூவீலர்கள் அனைத்தும், ஒருவழிப்பாதையான மேம்பாலத்தில் ஏறி ஈரோடு செல்கின்றன. இந்த வாகனங்கள் ஏறும் போது, ஈரோட்டிலிருந்து இறங்கி வரும் வாகனங்கள் நகராட்சி அலுவலகம் முன்பு குறுகலான சந்திப்பில் சிக்கி நெருக்கடி ஏற்படுகிறது.

மேம்பாலத்திலிருந்து நகராட்சி எதிரே உள்ள சாலையில் எஸ்ஐசி அலுவலகம் வரை, சங்ககிரி சாலையை காவல்துறை தடுப்பு வைத்து இரண்டாக பிரித்து மேம்பாலத்தில் ஏறுவதற்கு தடை விதித்து, ஒருவழிப்பாதையாக அறிவிப்பு வைத்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பை வாகன ஓட்டிகள் கண்டு கொள்வதே இல்லை. சங்ககிரி சாலையில் ஒரு வழிப்பாதையில், ஒரே நேரத்தில் வாகனங்கள் ஏறி இறங்குவதால் நகராட்சி அலுவலகம் எதிரே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் உண்டாகிறது. எனவே, நகராட்சி அலுவலகம் முன்புள்ள சாலை தடுப்புகளை காவல்துறை அகற்ற வேண்டும். அல்லது அறிவிப்பு வைத்துள்ளபடி ஒருவழிப்பாதையில் செல்லும் வாகனங்களை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும். மாலை நேரங்களில் இங்கு போக்குவரத்து காவலர்களை பணியமர்த்தி வாகனங்களை நெறிப்படுத்தாவிட்டால், விபத்துகள் தொடர்வதை கட்டுப்படுத்த முடியாது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: