சென்னை: ஆறு ஆண்டுகளில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் கலைமான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 611 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி சென்னை ஐஐடி வளாகம்தான். கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் உலகப்புகழ் பெற்ற இந்த நிறுவனம், தற்போது ஒரு மிகச்சிறந்த சுற்றுச்சூழல் வெற்றிக்காகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இங்குள்ள அரிய வகை ‘வெளிமான்களின்’ (பிளாக் பக்) எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது, இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நூற்றுக்கணக்கான வெளிமான்களின் புகலிடமாக விளங்கும் இங்கு கடந்த 40 வருடங்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமான்கள் சுதந்திரமாக உலா வந்தன. ஆனால், நகரமயமாக்கல், முறையற்ற வேலி அமைப்புகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணங்களால் 2003ம் ஆண்டு முதல் இவற்றின் எண்ணிக்கை 20-க்கும் கீழாக சரிந்தன.
ஒரு கட்டத்தில் இந்த இனம் இந்த வளாகத்தை விட்டே அழிந்துவிடுமோ என்ற அச்சமும் நிலவியது. இந்தநிலையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் ‘‘2021ம் ஆண்டில் வெறும் 12 ஆக இருந்த வெளிமான்களின் எண்ணிக்கை, 2026ம் ஆண்டில் 77 ஆக உயர்ந்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளன.
2009ம் ஆண்டு 21 ஆக இருந்த எண்ணிக்கை, தற்போது 77-ஐ எட்டியிருப்பது சுற்றுச்சூழல் சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த வளாகம் தற்போது 77 கலைமான்கள் மட்டுமல்லாமல், 250 புள்ளி மான்கள், 298 வகை தாவரங்கள், 35 வகை விலங்குகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பறவை மற்றும் பட்டாம்பூச்சி இனங்களுக்கும் சொர்க்கமாகத் திகழ்கிறது.
இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் தரப்பில் கூறுகையில் ‘‘மான்களின் தடையற்ற நடமாட்டத்திற்காக, வளாகத்திற்குள் இருந்த தேவையற்ற வேலிகள் மற்றும் தடைகள் அகற்றப்பட்டன. இது இனப்பெருக்கம் செய்ய வழிவகுத்தது. மான்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த இடத்தில் மான்களுக்குப் பிடித்தமான உள்ளூர் புல்வெளித் தாவரங்கள் வளர்க்கப்பட்டன.
கடந்த 2024ம் ஆண்டில் சில வனவிலங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து, ஐஐடி நிர்வாகம் மிகவும் கடுமையான விதிகளை கொண்டு வந்தது. வளாகத்திற்குள் வாகனங்களின் வேக வரம்பு 20 கி.மீ ஆகக் குறைக்கப்பட்டது. இதனை மீறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும், வாகனப் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இது மான்கள் அச்சமின்றிச் சாலைகளைக் கடக்க உதவியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
