சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் 5ம் தேதி திருவாரூரில் மாபெரும் வணிகர் தினம் மாநாடு நடக்கிறது. கடும் வெயில் தாக்கமின்றி கோடைகால பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகிற 5ம் தேதி 43வது வணிகர்தினம் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடாக காவேரி சூழ்ந்த டெல்டா மாவட்டம், ஆரூர் என அழைக்கப்படும் அழகிய திருவாரூரில் நடைபெறுகிறது. பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, மாநிலப் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மாநாட்டு பந்தல் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக லட்சக்கணக்கான வணிக பெருமக்கள் அமரும் வகையில், கோடை வெயில் தாக்கமின்றி மிக உயரமான அளவில் அமைக்கும் பணி, இரவு பகலாக முழு மூச்சுடன் திருவாரூர் மாவட்டத்தலைவர் லயன் வி.கே.கே.ராமமூர்த்தி முன்னிலையில் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்புடன் மாநாட்டு பந்தல் பணிகள் நடைபெற்று வருகின்றது. தமிழக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாநாட்டிற்கு வருகை தரும் வணிக பெருமக்கள் அனைவருக்கும் 50-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள், நூற்றுக்கணக்கான தங்கும் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
மாநாட்டிற்கு வருகை தரும் அனைவருக்கும் காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி, இரவு உணவு உட்பட அனைத்தும் சுகாதாரமான முறையில் மாநாட்டு திடலில் அனைவருக்கும் எளிதாக கிடைத்திடும், வகையில் இடவசதிகள் இந்த ஆண்டு மிச் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது.
தமிழக அனைத்து சிறு,குறு நிறுவனங்கள், தங்களின் நிறுவன பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், ஷாப்பிங் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, மாநாட்டிற்கு வருகின்ற அனைத்து வணிகர்களும் காணும் வகையில், வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
