தூத்துக்குடி, ஏப். 29: தூத்துக்குடி அருகே அனுமதியின்றி குளத்தில் மண் அள்ளிய சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்த ஜேசிபி, லாரி பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி அருகே உள்ள வர்த்தகரெட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மாரிசங்கர் ரோந்து சென்றபோது, இப்பகுதியில் உள்ள குளத்தில் சிலர் ஜேசிபி இயந்திரம் மூலம் எந்தவித அனுமதியும் இல்லாமல் மண் அள்ளிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் விரைந்து வந்து குளத்தில் மண் அள்ளிக் கொண்டிருந்த ஜேசிபி ஆபரேட்டர் எல்லநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமசாமி(33), லாரி டிரைவர் நடுக்கூட்டுடன்காட்டை சேர்ந்த வெள்ளைச்சாமி(45) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரி, ஒன்றரை யூனிட் மண் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
