குளச்சல்,ஏப்.29: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் முதலாமாண்டு வருஷாபிஷேகம் நாளை (30ம் தேதி) மற்றும் மே 1ம் தேதி நடக்கிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மேற்கூரை கடந்த 2022ம் ஆண்டு ஜூ ன் மாதம் 2ம் தேதி தீப் பிடித்து எரிந்தது. இதனைத் தொடர்ந்து ரூ.1.70 கோடி செலவில் திருப்பணிகள் நடத்தப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் 11ம் தேதி கலசாபிஷேகம் மற்றும் கோபுர கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வரும் 30 மற்றும் மே 1ம் தேதி என இரண்டு நாட்கள் முதலாமாண்டு வருஷாபிஷேகம் நடக்கிறது.
முதல் நாள் காலை 4.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், மதியம் 12 மணிக்கு நிசாஹோமம், தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசவேலி, ஆச்சார்யவர்ணம், முதல் கால யாகசாலை பூஜை, 1008 சங்குபூஜை, 108 கலச பூஜை, இரவு 8 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது. 2ம் நாள் சித்ரா பவுர்ணமி அன்று காலை 4.30 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம், இரண்டாம் கால யாகசாலை பூஜை, 1008 சங்குபூஜை, 108 கலசபூஜை, காலை 9 மணிக்கு மூலஸ்தானத்தில் 1008 சங்காபிஷேசம், 108 கலசாபிஷேகம் 11 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6.30 மணிக்கு புஷ்பாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
