செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலின் சித்திரைப் பெருவிழாவையொட்டி நடைபெற்ற பஞ்சரத தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சித்திரை ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா.
சித்திரை பெருவிழாவின் 7-ம் நாளான இன்று இந்த பிரம்மாண்ட தேரோட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை விட இந்த தேர் வித்தியாசமானது ஏனெனில் ஒரே நேரத்தில் ஐந்து தேர்கள் வலம் வருவது வழக்கம். இந்த தேரில் விநாயகர், முருகப்பெருமான், வேதகிரீஸ்வர், திரிபுரசுந்தரி அம்மாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் தனித்தனியே ஐந்து தேர்களில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.
திருக்கழுகுக்குன்றம் பகுதியில் தேரோட்டத்தின் காரணமாக ஒரு சில அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். திருக்கழுகுக்குன்றம் தேரோட்டம் இன்று காலை 6 மணியளவில் துவங்கியது, மாலை 2 அல்லது 3 மணிக்கு தேரோட்டம் நிறைவுறும் என தெரிவிக்கின்றனர். இந்த தேரோட்டத்தின் காரணமாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
